சொத்து வாங்கும் போது சரி பார்க்க வேண்டிய ஆவணங்கள் ! சொத்து வாங்கும் போது சரி பார்க்க வேண்டிய ஆவணங்கள் ! - ETbuild

சொத்து வாங்கும் போது சரி பார்க்க வேண்டிய ஆவணங்கள் !

வீடு, வீட்டு மனை, நிலம் வாங்கும் போது அது தொடர்பான ஆவணங்கள் தான் அந்த சொத்தின் மீது வாங்கிய வருக்கு இருக்கும் உரிமையை நிலை நாட்டுகின்றன.
பத்திரம்

ஆவணங்கள் சரியாக இல்லை என்றால் வாங்கிய சொத்துக்கு உரிமை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

ஆகையால் சொத்து வாங்கும்போது அது தொடர்பான ஆவணங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டும். அந்த ஆவணங்கள் என்ன என்பது பற்றி பார்ப்போம். 

பத்திரம்

சொத்து வாங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆவணம் பத்திரம் ஆகும். இடத்தை உரிமையாளரிடம் இருந்து அதை வாங்கும்போது சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது.

இடத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லை என்றால் அவருடைய வாரிசுகள் அனைவருடைய சம்மதத்தோடு தான் நிலம் விற்கப்படுகிறதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

வாரிசுகள் யார் என்பதை வாரிசு சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது நல்லது. வாரிசுகள் யாருக்கும் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது.

வாரிசுகளில் யாராவது மைனராக இருந்தால் கோர்ட்டு நியமிக்கும் காப்பாளர் மூலம் தான் சொத்து விற்பனை செய்யப்பட வேண்டும். 

பட்டா

நிலத்தின் மீது யாருக்கு உரிமை இருக்கிறது என்பதை தீர்மானிக்கும் பட்டா இடத்தை விற்பவர் பெயரில் தான் இருக்கிறதா?

என்பதை சரி பார்க்க வேண்டும். அவர் வேறு ஒருவரிடம் இருந்து நிலத்தை வாங்கி இருந்து தனது பெயருக்கு மாற்றாமல் இருக்கலாம்.
பட்டா
ஒருவேளை நிலத்தின் உரிமையாளர் இறந்துபோய் இருந்தால் பட்டா பழைய உரிமையாளர் பெயரிலேயே இருக்கும். அப்படி இருக்கும்போது இடத்தை வாங்கும் உங்கள் பெயருக்கு மாற்றும்போது சிக்கல்களை சந்திக்க நேரலாம்.

எனவே பட்டாவை இடத்தை வாங்கும் உங்கள் பெயருக்கு மாற்றுவதில் பிரச்சினை இருக்கிறதா? என்பதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். 

அதிகார பத்திரம் (பவர் ஆப் அட்டர்னி)

சொத்தின் உரிமையாளர் தனது சொத்தை விற்பனை செய்து கொடுப்பதற்காக நியமித்து இருக்கும் ‘பவர் ஆப் அட்டர்னி’ அதிகாரம் பெற்றவர் மூலம் சொத்து வாங்கும் போது அவருக்கு சொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் சொத்தை விற்பனை செய்து ஆவணத்தில் கையெழுத்து போடுவதற்கான அதிகாரம் அல்லாமல் குறிப்பிட்ட ஒரு செயலை மட்டுமே செய்யக்கூடிய தனி அதிகார பத்திரத்துக்கான ‘பவர்’ உரிமை கூட மட்டுமே வழங்கப்பட்டு இருக்கலாம்.

அப்படி இருக்கையில் அவரிடம் இருந்து சொத்தை வாங்கி விற்பனை ஆவணம் பதிவு செய்து கொள்ள முடியாது.

மேலும் ‘பவர் ஆப் அட்டர்னி’ அதிகாரத்தை நிலத்தின் உரிமையாளர் ரத்து செய்திருந்தாலும் பதிவு செய்வது செல்லாததாகி விடும் என்பதால் உரிமையாளரை நேரில் பார்த்து பேசி விடுவது நல்லது. 

வில்லங்க சான்றிதழ்

சொத்துகள் வாங்கும் போதும், விற்கும் போதும் சம்பந்தப்பட்ட சொத்தில் ஏதும் பிரச்சினைகள் உள்ளதா? என்பதை அறிந்து கொள்ள உதவும் வில்லங்க சான்றிதழை 30 ஆண்டுகளுக் காவது சரி பார்த்து விட வேண்டும்.

அதன் மூலம் சொத்து மீது வில்லங்கம் எதுவும் இருந்தால் தெரிந்து விடும். தாய்பத்திரத்தில் இருந்து நாம் யாரிடம் நிலம் வாங்குகிறோமோ அதுவரை உள்ள அனைத்து பத்திரங்களையும் நாம் சரி பார்த்துக் கொள்ளலாம். சொத்து அடமானத்தில் இருந்தாலும் தெரிந்து விடும்.

அதே சமயத்தில் பதிவு செய்யாமல் வேறு யாரிடமாவது சொத்தை விற்க ஒப்பந்தம் போட்டு இருந்தால் அது தெரியாது. ஆகவே வில்லங்க சான்றிதழ் மட்டுமின்றி அது சார்ந்த விஷயங்களையும் கவனமாக ஆராய வேண்டும். 

மூல பத்திரம்

சொத்தை வாங்குவதற்கு முன்பணம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். அந்த ஆவணம் இல்லை என்றால் சொத்து அடமானத்தில் இருக்கலாம். அதனால் ஆவணத்தை சரிபார்ப்பது நல்லது.
மூல பத்திரம்
சில சமயம் மூல ஆவணம் நமது கைக்கு கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போகும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும் போது ஒரிஜினல் மூல ஆவணத்தை பார்வையிட்டு சரி பார்ப்பது முக்கியம். 

கட்டுமான அனுமதி

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதாக இருந்தால் மற்ற ஆவணங்களுடன் கட்ட அனுமதி, வரைபட அனுமதி உள்பட அனைத்து அனுமதி விவரங்களையும் பார்க்க வேண்டும்.

அனுமதி பெற்றப்படி தான் கட்டுமான பணி நடைபெற்று இருக்கிறதா? விதிமீறல் எதுவும் இருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இதுதவிர நிலமாக இருந்தால் அடங்கல், சிட்டா தொடர்பான ரசீதுகள், சொத்துவரி செலுத்திய ரசீதுகளை பார்வையிட்டு முறையாக வரி செலுத்தப்பட்டு வருகிறதா? என்பதை சரிபார்க்க வேண்டும்.
Previous Post Next Post
COMMENTS... plz use me